4.01 - அறிமுகம்: பத்துக் கட்டளைகளின் பெரும் அவசியம்
டெல்லியிலிருந்து காஷ்மீரத்தில் உள்ள ஸ்ரீநகருக்கு விமானத்தில் ஒருவர் பயணிக்கும்போது, வட இந்தியச் சமவெளிகளிலிருந்து எழுந்துவரும் இமயமலை மேகங்களால் சூழப்பட்டிருக்கும் மாபெரும் அழகை கண்ணாரக் கண்டு களிப்பார். கோபுரங்கள் போல உயர்ந்திருக்கும் மலை முகடுகள் ஆழமும் குறுகலுமான பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த முகடுகளில் மிகவும் பெரியவைகள் 8000 மீட்டர்வரை உயரமானவைகளாகவும் சாதாரணமானவை 5000 மீட்டர்வரை உயரமானதாகவும் காணப்படுகின்றன.
ஸ்ரீநகரில் இறங்கும் அந்தப் பயணி வியப்பளிக்கத்தக்க பல்வேறு சமய மற்றும் கலாச்சாரங்களின் கலவையை அங்கு சந்திக்கிறார். அங்கு இந்துக்களும், பௌத்தர்களும், யூதர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இறைமறுப்பாளர்களும் ஒருமித்து வாழ்கிறார்கள். கோவில்களும், தேவாலயங்களும், மசூதிகளும், விளம்பரப் பலகைகளும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்குப் போட்டியிருகின்றன. இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய ஐந்து வித்தியாசமான தேசங்கள் உலகத்தின் இந்த சிறிய மூலையில் சந்திக்கின்றன. காஷ்மீரத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணிக்கும் எவரும் மக்களிடையே நிலவும் ஒருவித பதட்டத்தை உணராதிருப்பது அரிது. உண்மையில் 1991-ம் ஆண்டிலிருந்து இரத்தக் கறைபடிந்த ஒரு உள்நாட்டுப் போர் இந்த அழகான பள்ளத்தாக்கைப் புரட்டிப்போட்டிருக்கிறது.
உலகத்தினுடைய மாபெரும் மதங்களின் வழக்கங்களும் சட்டங்களும், அரசாங்கங்களின் அரசியல் நோக்கங்களும் இமயமலைகளின் தொடரைப் போலவே நீண்ட நெடிய தொடர்களாயிருக்கின்றன. ஆனால் இமயமலையின் சிறு முகடுகளுக்கு நடுவில் உயர்ந்திருக்கும் சிகரங்களைப் போல பல்வேறு எழுத்துக்களும், வழிபாட்டிலக்கியங்களும், சமயச் சட்டங்களும் மற்றவற்றைக் காட்டிலும் உயர்ந்து நிற்கின்றன.
இவ்வாறு உலக வரலாற்றில் உயர்ந்து நிற்கும் சிகரங்களில் ஒன்று பத்துக் கட்டளைகள் ஆகும். ஒருவராகிய உண்மைக் கடவுள் மேய்ப்பனாகிய மோசேயிடம் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தி, அதை மக்களுக்குத் தனிச்சிறப்பான கட்டளைகளாக கற்பலகையில் எழுதிக்கொடுத்தார். இறைவன் தங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ள நடுவராகப் பயன்படுத்திய மோசேயை யூதர்கள் அதிகமாக மதித்தார்கள். 3,300 வருடங்கள் சென்ற பிறகும் இன்றுகூட அவருடைய எழுத்துக்கள் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் வாசிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்களும் தங்களுடைய நம்பிக்கையின் மாற்றமுடியாத அடித்தளமாக கொண்டிருப்பதும் இந்தப் பத்துக் கட்டளைகளே. மோசேயினால் கொடுக்கப்பட்ட சட்டத்தில் எழுதியிருக்கிறவைகள் அனைத்தும் நிறைவேறும்வரை, அதில் ஒரு எழுத்தோ, எழுத்தின் உறுப்போ அழியாது என்று இயேசுவும் சொல்லியிருக்கிறார் (மத்தேயு 5:18).
முஸ்லிம்கள் மோசேயை “கலிமு அல்லாஹ்” அதாவது இறைவனுடைய பேச்சாளன் என்று அழைக்கிறார்கள். மோசே அல்லாஹ்வின் தூதுவர் மட்டுமல்ல அவர் ஒரு அரசியல் தலைவர் என்றும் அதனால் அவருக்கு மார்க்கம் தொடர்பான அதிகாரம் மட்டுமன்றி அரசியல் அதிகாரமும் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் வரலாற்றில் வாழ்ந்த மாபெரும் மனிதர்களில் ஒருவராக அவர் காணப்படுகிறார்.
மோசேயின் மூலமாகமாக மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கற்பனைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது மட்டுமன்றி, இன்றைய காலம்வரை மனிதர்களுடைய அடிப்படைத் தேவையாயிருக்கிறது. இந்தச் சட்டங்களைப் படிக்கிறவர்களும், கடைப்பிடிக்கிறவர்களும், மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்களும் ஞானிகளாவார்கள். இவற்றை மறந்துபோகிறவர்கள் அல்லது புறக்கணிக்கிறவர்கள் சீரழிந்து, ஒழுக்கங்கெட்டு, அழிந்து போவார்கள். இவ்வித அழிவிலிருந்து காக்கப்பட விரும்புகிறவர்கள் பத்துக் கட்டளைகளை ஆர்வத்தோடு படிக்க வேண்டும்.
காஷ்மீரத்தில் இந்தப் பத்துக் கற்பனைகளைத் தியானிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. புராதன சமயங்கள் அங்கு நவீன தத்துவங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதோடு, வாழ்வின் அனுதின நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டின் சட்டங்களுக்குத் திரும்பும்படி மக்களை நிர்ப்பந்திக்கிறது. “இவ்வுலகத்தின் ஊச்சியில்” இருக்கும் ஒரு வாலிபனோடு நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாகவே இந்த நூல் எழுதப்படுகிறது. பல்வேறு சமயப் பின்னணியிலிருந்து வரும் வாலிபர்கள் சத்தியத்தையும் தங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் தேடுகிறவர்களாக இருக்கிறார்கள். தற்காலத்திற்கு பத்துக் கட்டளைகள் பொருத்தமானவைகளாயிருக்குமா என்று வினவுகிறார்கள். பத்துக் கட்டளைகளைப் பற்றி சிந்தித்து, அவற்றைத் தியானிக்கிற எவரும், தங்கள் அனுதின வாழ்வில் பயன்படக்கூடிய அனைத்துக் காலத்திற்குமுரிய ஞானத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.